
ஈப்போ, ஆக. 20: இங்குள்ள புந்தோங் தொகுதி மக்கள் இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வு வரும் 23.8.2025(சனிக்கிழமை) காலை மணி 9.00 முதல் மதியம் மணி 2.00 வரை, டேவான் கொமினிட்டி ஸ்ரீ டேசா ரிஷாவில் நடைபெறவுள்ளதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ம.துள்சி கூறினார்.
இந்த சுகாதார பரிசோதனை முகாமில் சிறார்கள் முதல் முதியவர்கள் வரை பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மகளிர்கள் மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள இங்கு வசதிகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, பற்கள் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இதுவரை பற்களை பரிசோதனை செய்யாதவர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், மேலும் பல மருத்துவ பரிசோதனைகளும், ஆலோசனைகளும் வழங்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு உதவிட முன்வந்துள்ளனர். குறிப்பாக, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சக்கரை அளவு போன்ற பரிசோதனைகளும் இங்கு மேற்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த மருத்துவ பரிசோதனை நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

