
கோலாலம்பூர், ஏப்.24-
தேசிய முன்னணியில் (Barisan Nasional) கூட்டணி கட்சியாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இணைவதற்கு மஇகா எந்தவிதத் தடையும் ஏற்படுத்தாது என அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் இதனை தெரிவித்தார்.
இன்று விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணியின் நட்பு கட்சியாக செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அது அதிகாரப்பூர்வ கூட்டணி கட்சியாக இணைய விரும்பினால், அதற்கு ஆதரவளிக்கும் வகையில் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உடன் பேசத் தயாராக இருப்பதாகவும், மஇகா எந்தவித எதிர்ப்பையும் முன்வைக்காது என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்ததாக தனேந்திரன் கூறினார்.
இந்த நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் சக்தி கட்சி விரைவில் தேசிய முன்னணியில் கூட்டணி கட்சியாக இணையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஆர்.கே. ரமேஷ், உதவித் தலைவர் கே. குகேஸ்வரன், உச்சமன்ற உறுப்பினர் எஸ்.பி. கானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தங்களது வருகையை அன்புடன் ஏற்று மரியாதையுடன் உபசரித்த விக்னேஸ்வரனுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக தனேந்திரன் தெரிவித்தார்.

