
நீலாய், ஏப் 24-
கடந்த 15 ஏப்ரல் 2026 அன்று நீலாய் தமிழ்ப்பள்ளி வளாகம் ஒரு சிறப்புமிக்க நாளைக் கொண்டாடியது.
மலேசியாவின் தங்க மகனாகப் போற்றப்படும் மதிப்புமிகு டத்தோ டூத்தா டாக்டர் சந்திரன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்தது கல்விக் குடும்பத்திற்கே பெருமை சேர்த்த நிகழ்வாக அமைந்தது.
அவரை பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், பள்ளி வாரியத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பேரானந்தத்துடன், அன்பும் மரியாதையும் கலந்த வரவேற்புடன் வரவேற்றனர்.
“அறிவு தான் மனிதனின் அழியாத செல்வம்” என்ற பொன்மொழியை வாழ்வில் நடைமுறைப்படுத்தியவராகத் திகழும் டத்தோ அவர்கள், தமது அனுபவக் களஞ்சியத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஆழமான சிந்தனைகளுடன் உரையாற்றினார்.
அவர் பகிர்ந்த ஒவ்வொரு அனுபவமும் வாழ்க்கைப் பாடமாகவும், முன்னேற்றப் பாதைக்கு ஒளிவிளக்காகவும் அமைந்தது.

குறிப்பாக, பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை மேம்படுத்துவதற்கான பல பயனுள்ள, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் செறிவான ஆலோசனைகளை வழங்கியதன் மூலம், பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தை அமைத்தார்.
“சிறு துளி பெரு வெள்ளம்” என்ற உண்மையை வலியுறுத்திய டத்தோ அவர்கள், ஒற்றுமையும் திட்டமிடலுமே வளர்ச்சியின் திறவுகோல் என எடுத்துரைத்தார். மேலும், பள்ளி முன்னேற்றப் பயணத்தில் தம்மால் இயன்ற ஆதரவையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தது, எங்கள் அனைவருக்கும் பேரானந்தத்தை அளித்தது.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில், டத்தோ டூத்தா டாக்டர் சந்திரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இனிதே நடைபெற்றது.
அன்பும் நன்றியும் பொங்க, அனிச்சல் வெட்டி கொண்டாடப்பட்ட அந்தத் தருணம் அனைவரின் இதயத்திலும் இனிய நினைவாக பதிந்தது.
“உதவி செய்பவன் உயர்வான்” என்பதற்கேற்ப, கருணை உள்ளம் கொண்ட டத்தோ அவர்கள் தமது அயராத சேவையினால் சமூகத்திற்கும் கல்விக்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்து வருகிறார்.
அவரின் அர்ப்பணிப்பு உணர்வும் மனிதநேயப் பண்பும் எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
இத்தகைய உயரிய வாழ்வியல் கோட்பாட்டினை அடையாளமாய் கொண்ட டத்தோ டூத்தா டாக்டர் சந்திரன் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து தமது வற்றாத சேவையை வழங்கி பல தலைமுறைகளின் வாழ்வில் ஒளி வீசிட எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுடன்,
நீலாய் தமிழ்ப்பள்ளி நிர்வாகம்.

