விபத்தில் சிக்கிய இரு உடன்பிறப்புகளுக்கு 42,000 ரிங்கிட் மதிப்புடைய மலிவு விலை வீடு

நிபோங் திபால், ஆகஸ்ட் 25 – இவ்வாண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய இரு உடன்பிறப்புகளுக்கு பண்டார் தாசேக் முத்தியாராவில் 42,000 ரிங்கிட் மதிப்புடைய RUMAH MUTIARAKU மலிவு விலை வீடு வழங்கப்பட்டது.

வயது குறைவு காரணமாக தற்போது அச்சிறுவர்களின் பாட்டியான எம்.அமிர்தம் பெயரில் அவ்வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களும் 18 வயதை அடையும் போது, அந்த வீடு அவர்களின் பெயருக்கு மாற்றப்படும் என்று பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ்.சுந்தரராஜூ தெரிவித்தார்.

“ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் வீட்டு வாரியம் மூலமாக அவர்களுக்கு வீடு வழங்கும் முயற்சியை மேற்கொண்டேன். இந்த வீட்டின் மதிப்பு 42 ஆயிரம் ரிங்கிட். இதனால் கடனில்லாத ஒரு வாழ்க்கையையும் சிறந்த வாழ்வாதார நிலையையும் அந்த சிறுவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற எண்ணத்திலே இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் விவரித்தார்.

இதனிடையே, நண்பர்கள் மற்றும் சில நல்லுள்ளம் படைத்தவர்களின் துணையோடு விபத்தில் பாதிக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு முன்னதாக நிதி திரட்டியபோது இரண்டு லட்சத்து 22 ஆயிரம் ரிங்கிட் பணம் திரட்டப்பட்டது.

அதில் 42,000 ரிங்கிட் வீடு வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வேளையில், எஞ்சிய தொகை அவ்விரு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுந்தரராஜூ விவரித்தார்.

“வறுமை அப்பிள்ளைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதித்துவிடக்கூடாது என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை மாதந்தோறும் அவர்களுக்கு 1,500 ரொக்கம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இத்தகைய சமூகநல உதவி, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலை அளிக்கும் என்று தாம் நம்புவதாக சுந்தரராஜூ கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles