கவிதை கலந்துரையாடலுக்கு எழுத்தாளர் சங்கம் வித்திட வேண்டும் – டாக்டர் ஜெயபாலன்!!

ஈப்போ,ஆக26: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புதுக்கவிதையின் தொடர்ச்சியாக கவிதை கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அச்சங்கத்தின் புரவலரும் மகப்பேறு மருத்துவருமான கவிஞர் வ.ஜெயபாலன் கேட்டு கொண்டார்.

அத்தகைய கலந்துரையாடல் மாதம் ஒருமுறை “கவிதை பேசுவோம் வாங்க” என்னும் வகையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த அவர் நல்ல கவிதைகள் பேசவும்,எழுதவும்,கவிதைகளோடு பயணிக்கவும் இக்கலந்துரையாடல் ஒரு களமாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புதுக்கவிதை பயிலரங்கில் சிறப்புரையாற்றிய மருத்துவர் ஜெயபாலன் இதனை வலியுறுத்தினார்.

இன்றையச் சூழலில் புதுக்கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.அவர்களிடையே வலுவான ஆர்வத்தை மேலோங்க செய்திட இந்நடவடிக்கை தேவையாகவே இருப்பதாகவும் கூறினார்.மேலும்,கவிதைகளின் அழகியல்,கவித்துவம்,உணர்ச்சி,என பல்வேறு விடயங்களையும் பகிர்ந்த அவர் அனைவரின் உள்ளத்திலும் ஒரு கவிதை மனம் இருக்கும்,அதனை முறையாக தட்டி எழுப்பி ஆளுமை கொண்டால் நல்ல கவிஞர்கள் கிடைப்பார்கள் என்றார்.

முன்னதாக இப்பயிலரங்கிற்கு தலைமையேற்ற சங்கத்தின் தலைவர் சிவாலெனின் ஏற்பாடு செய்யப்பட்ட இப்புதுக்கவிதை பயிலரங்கம் இத்தோடு முடிந்துவிடுவதில்லை.இது தொடக்கமே.இதன் தொடர்ச்சி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆகப்பூர்வமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புதுக்கவிதை மட்டுமின்றி மரபுக்கவிதை சார்ந்து நடவடிக்கை முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என குறிப்பிட்ட அவர் இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகளில் சங்கம் தீவிர முனைப்பு காட்டும் எனவும் தனதுரையில் கூறினார்.

அதேவேளையில்,எங்களுக்கு எண்ணிக்கைகள் வேண்டாம்,ஆர்வத்தோடு புதுக்கவிதையில் பயணிக்கும் பங்கேற்பாளர்களே போதுமானவர் என்றும் கூறியதோடு இன்றைய பயிலரங்கில் பங்கேடுத்தவர் இப்பயிலரங்கு வாயிலாக ஏதாவது ஒன்றை கற்று பயனடைந்தாலே எங்களின் இலக்கில் நாங்கள் சரியாக நகர்கிறோம் என்பதை அது உறுதி செய்துவிடும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

சுமார் 40 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கினை நாடறிந்த புதுக்கவிதை படைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் சிவா (சுங்கை பட்டாணி) நனிச் சிறப்பாக வழிநடத்தினார்.

கவிதை எழுதும் யுக்தி,எது கவிதை,கவிதைக்கான் கரு,சினிமா பாடல் வழி பிறக்கும் கவிதை,கவிதைக்கான அழகியல்,கவிதை மனதில் சிந்தனை என பல்வேறு தகவல்களைப் பங்கேற்பாளர்களுக்கு கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் புதுக்கவிதையாய் படைத்தார்.

இப்பயிலரங்கில் கலந்து கொண்ட புதுக்கவிதை ஆர்வலர்களுக்கு சான்றிதழோடு டாக்டர் ஜெயபாலனின் கவிதை நூலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,இப்பயிலரங்கம் சிறப்பாக அமைய பெரும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கி சங்கத்தின் துணைத்தலைவர் திரு.ச.முனியாண்டி,செயலாளர் கவிஞர் மகேந்திரன் நவமணி,செயலவை உறுப்பினர்கள்,நெறியாளர் புவனேஸ்வரி,ஆசிரியர் சிவபாலன் உட்பட அனைவருக்கும் நன்றி பகிரப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles