
ஈப்போ, செப்.4: பேராக் மாநிலம் சர்க்கரை பயன்பாட்டை எதிர்த்து போராடும் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் நிலைப்பாட்டில் இம்மாநிலம் இருந்து வருகிறது.
அத்துடன், இந்த தீவிர பிரச்சாரத்திற்கு மாநில ஆட்சிக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பேராக் சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இந்நாட்டில் 54 சதவீத மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலைப்பாடு மிகவும் ஆபத்தானது.
அதன் அடிப்படையில் பேராக் மாநில அரசாங்கம் சீனியை பயன்படுத்தும் செயல்நடவடிக்கைகளுக்கு எதிர்த்து போராடும் திட்டத்தை வரையறுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த சீனியை அதிகம் பயன்படுத்துவதால் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதர உடல உபாதைகளை மக்கள் எதிர்நோக்க வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளனர்.
இதன் ஆய்வு ஆவணங்கள் குறித்த அறிக்கை விரைவில் மாநில அரசு வெளியிடும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் மலேசிய மக்கள் சராசரி 12 கரண்டி சீனியை பயன்படுத்தி வருகின்றனர்.
இது உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும் என்பதனை உணர்ந்து செயல்படுவது அவசியம் என்று அவர் அறிவுறுத்தினார்.
இந்த தீவிர பிரச்சாரத்தில் முதல் கட்டமாக ஒவ்வொரு மக்களும் சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
அவரவர் சுகாதாரத்திற்கு முன்னுரிமையும், முக்கியதுவமும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மீடியா வாயிலாக தகவல்கள் மக்களை சென்றடைய வேண்டும். குறிப்பாக, இந்நாட்டிலுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும்.
ஒரு கிளாஸ் தேநீருக்கு ஒரு கரண்டி சீனி போதுமானது என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.
உணவுப் பொருட்களில் சீனியின் அளவை படித்து உணர்ந்து உட்கொள்ள முற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இத்திட்டம் மக்களிடையே சென்றடைந்து அதன் அமலாக்கம் குறித்து ஆய்வு அல்லது கண்காணிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும்.
அதோடு, தூய்மையான முறையில் உணவு தயாரிக்கும் வியாபார தலங்களுக்கு சலுகைகள் மற்றும் பரிசுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
அத்துடன், இலவசமாக தண்ணீர் வழங்குவதோடு, பழங்களை சேர்த்துக்கொள்வது மற்றும் சுகாதார கோட்பாடுடன் உணவு தயாரிக்கும் உணவகங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்படும் என்று அவர் கருத்துரைத்தார்.
மாநில மற்றும் மத்திய அரசின் விருந்து நிகழ்வுகளில் சீனி பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
குறிப்பாக, நீர் பானங்களில் சீனி பயன்பாட்டை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும்.
தயாரிக்கப்படும் உணவுகளிலும் சீனி பயன்பாட்டை குறைப்பது மிகவும் அவசியம் என்று அவர் அறிவுறுத்தினார்.

