
பெட்டாலிங் ஜெயா, செப் 6 –
சந்தேகத்துக்கிடமான சூழலில் மரணமடைந்ததாக நம்பப்படும் மருத்துவர் சிந்துமதி முத்துசாமி (வயது 35) மரணம் தொடர்பில் விசாரணை கோரி 28 போலீஸ் புகார்கள் அளித்தும் (AGC) அலுவலகம் மௌனம் காக்கும் நிலையில், குடும்பத்தினர் துரித விசாரணை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
2023 அக்டோபர் 8 ஆம் திகதி அன்று, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள குடியிருப்பில் சிந்துமதி தொண்டையில் பிளாஸ்டிக் பை சுருக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரின் மரணம் குறித்து கடந்த 2024 ஜனவரி 19-ஆம் தேதி வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் தொண்டையில் சுருக்கப்பட்ட பிளாஸ்டிக் பையை வைத்து சுவாச வாயுவை திறந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் தான் அவரின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலில் டயசபாம் என்ற நரம்பு தளர்த்தி மருந்தும் கண்டறியப்பட்டது.
ஆகவே சிந்துவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான அம்சங்கள் உள்ளன. மேலும் அவரின் மரணம் குறித்த விசாரணையில் தாமதமும், முரண்பாடும் நிலவுகின்றன. ஆகவே விசாரணை அவசியம் என்று AGC க்கு சிந்து தரப்பிலான வழக்கறிஞர் மஹாஜோத் சிங் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிந்துமதியின் குடும்பம் 2024 ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் AGC-க்கு இருமுறை விசாரணை கோரி மனு அளித்தும் பதில் கிடைக்கவில்லை.
மேலும், சம்பவ இடத்தில் இரத்தம் மற்றும் பிற ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரத்தக் கறை படிந்த மெத்தைகள் DNA பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை என குடும்பம் குற்றம் சாட்டுகிறது.
போலீஸ் விசாரணை இன்னும் நடைபெறுவதாக தெரிவித்தாலும், இதுவரை எந்தத் தீர்மானமும் அறிவிக்கப்படாததால், சிந்துவின் குடும்பம் நீதிக்காக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.