

இந்திய இளைஞர்களை உருமாற்றும் மைஸ்கில் அறவாரியத்தின் முயற்சிகளை ஆம் பேங்க் குழுமத்தின் ஆதரவு மேலும் ஊக்குவிக்கிறது என்று தலைவர் பசுபதி இதனை கூறினார்.
கல்வி முறையிலிருந்து விலகி பின்தங்கிய இளைஞர்களுக்கு முழுமையான ஆதரவு வழிகாட்டுதல்களை மைஸ்கில் வழங்குகிறது. குறிப்பாக அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் மைஸ்கில் அறவாரியம் 3,000 இந்திய இளைஞர்களை உருமாற்றி உள்ளது. உணர்ச்சி திறன்கள், வாழ்க்கை மேலாண்மை, சமூக மேம்பாடு, தொழில் திறன் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் அவர்கள் உருமாற்றம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆம் பேங் குழுமத்தினர் மைஸ்கில் அறவாரியத்துடன் இணைந்துள்ளனர். குறிப்பாக இந்திய இளைஞர்களை உருமாற்றும் திட்டங்களுக்காக நிதியுதவியையும் வழங்கியுள்ளனர்.
ஆம் பேங்க் குழுமத்தின் இந்த உதவி மைஸ்கில் அறவாரியத்தின் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கிறது என்று பசுபதி கூறினார்.
முன்னதாக ஆம் பேங்க் குழுமம் 300,000 ரிங்கிட் மதிப்புள்ள மூன்று ஆண்டு ஆதரவு உறுதிப்பாட்டின் மூலம் மைஸ்கில் அறவாரியத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த ஆதரவு 2025 முதல் 2027ஆம் ஆண்டு வரை தொடரும். ஆண்டுதோறும் 30 இளைஞர்களை உருமாற்றும் நோக்கத்துடன் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்களை ஆதரிக்கும் முழுமையான மாற்றம், தொழில்சார் திறன் பயிற்சி திட்டங்களுக்கு இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
மைஸ்கில்ஸ் அறவாரியத்திற்கான எங்கள் ஆதரவு, ஒவ்வொரு இளைஞரும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அவர்களின் முழு திறனை அடையும் வாய்ப்பைப் பெற தகுதியானவர் என்ற எங்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
மேலும் கல்வி இடைவெளிகளைக் குறைத்து, இளைஞர்களின் நல்வழிப்படுத்துதல், தொழில் திறன்கள் என இரண்டிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் மட்டுமல்ல, நாட்டின் எதிர்கால பணியாளர்களிலும் நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று ஆம் பேங்க் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி லிங் கூறினார்.
ஆம் பேங்க் குழுமத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி இளங்கோ குப்புசாமி, ஜிசிசிஎம் தலைவர் ஷாஸ்மான் ஷாஹித், மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தேவசர்மா கங்காதரன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

