

கோலாலம்பூர் செப் 17-
பிரிக்பீல்ட்ஸ் பேட்மிண்டன் கிளப் ஏற்பாட்டில் விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான பேட்மிண்டன் போட்டி வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி செராஸ் அரினா டிபிகேஎல் பேட்மிண்டன் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு இந்த போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
விலாயா மாநிலத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகளில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 230க்கும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி இடம் பெறுகிறது. இரண்டு ஒற்றையர் மற்றும் மூன்று இரட்டையர் பிரிவில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
குருப் லீக் பாணியில் போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
கால் இறுதியில் வெற்றி பெறும் நான்கு குழுக்கள் அரையிறுதி சுற்றில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் இரண்டு குழுக்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு பெறும் என்று பிரிக்பீல்ட்ஸ் பேட்மிண்டன் கிளப் தலைவர் சேகரன் வேலாயுதம் தெரிவித்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் செல்லும் குழுவுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மெடல் வழங்கப்படும் என்றார் அவர்.
மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ பாராட் மணியம் மற்றும் அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் உறுப்பினர் வேணுகோபால் ஆகியோரும் சிறப்பு வருகை புரிகின்றனர் .
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேட்மிண்டன் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டி மாபெரும் அளவில் நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரிக்பீல்ட்ஸ் பேட்மிண்டன் கிளப் துணை தலைவர் பாலன் வீரையா, செயலாளர் டாக்டர் ரேய்மெண்ட் சாமி, பொருளாளர் ரமேஷ் சுப்ரமணியம், உச்சமன்ற உறுப்பினர்கள் நிர்மலன் மணியம், ராஜீவ் சோமசுந்தரம், தென்றல் அழகப்பன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.