ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்கள் மலேசியாவிற்கு வருகை

கோலாலம்பூர், அக் 25 – நாளை நடைபெறவிருக்கும் 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமாஃபோசா இன்று மலேசியா வந்தடைந்தனர்.

அவ்விரு தலைவர்களின் வருகை தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க வட்டாரங்களுடான மலேசியாவின் வெளி உறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த பத்திரிக்கை செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு லூலா டா சில்வா மீண்டும் பதவியேற்ற பிறகு மலேசியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.

இது மலேசியா-பிரேசில் இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதோடு இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் துங்கு நஸ்ருல் கூறினார்.

“கடந்த ஜூலை மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்களுக்கான உச்சநிலை மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டதிலிருந்து இந்த உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.

அப்போது மலேசியா தெற்கு நாடுகளுக்காக வலுவான குரலை வெளிப்படுத்தியதுடன் நியாயமான, சீரான மற்றும் நிலையான அனைத்துலக வர்த்தகம் மற்றும் நிதி அமைப்புக்காகப் போராடியது,” என்று துங்கு நஸ்ருல் அபைடா தெரிவித்தார்.

பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க தலைவர்களின் அதிகாரப்பூர்வ வருகை வெறும் நிகழ்ச்சி நிரல் மட்டுமல்ல, மாறாக உலகின் முக்கிய பகுதிகளில் மலேசியா கொண்டிருக்கும் சமநிலையான வெளி உறவுகளைக் குறிப்பதாக அவர் விவரித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles