
எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி சா ஆலம் (IDCC) மண்டபத்தில்
நடக்கவிருக்கும் *உரிமைக் கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டுக்கு நாட்டின் எதிர்கால நம்பிக்கையான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று உரிமை அரசியல் இயக்கத்தின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு.மார்கஸ் ராஜ் கேட்டுக்கொண்டார்.
அரசியலில் மாற்றம் வராதா என எதிர்பார்த்த இந்திய இளைஞர்களின் நம்பிக்கையாக உரிமைக் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நாட்டில் இந்திய சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக உரிமை அரசியல் இயக்கம் தொடர்ந்து குரல் கொடுத்தும் போராடி வருகிறது. தேசிய நீரோட்டத்தில் இருந்து இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதும் ஒதுக்கப்பட்டிருப்பதும் இன்றைய அரசியலில் தெள்ள தெளிவாக தெரிகிறது.
இந்த 68 ஆண்டுகள் ஜனநாயக ஆட்சியில் நாம் சாதித்தது என்ன என்று கேட்டால், ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
இதற்கெல்லாம் ஒரே வழி , அடுத்த தலைமுறையின் நம்பிக்கை என சொல்லப்படும் இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே நம் சமுதாயதின் பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும் என அவர் கூறினார்.
எனவே, இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று சொல்லிவிட்டு, ஒதுங்கிக் கொள்ளாமல் அரசியல்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்ற புரிதலுக்கு இளைஞர்கள் வர வேண்டும்.
இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்று முழங்கிய இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கூற்றுக்கு ஏற்றவாறு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தூய அரசியலை மலேசிய மண்ணில் கட்டமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எனவே , ஆட்சி அதிகாரம் நம்மை எவ்வாறு ஆள்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் வரும் நவம்பர் 30 ஆம் திகதி சா ஆலம் (IDCC) மண்டபத்தில் நடக்கவிருக்கும்
*உரிமைக் கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டுக்கு அதிகமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று திரு. மார்கஸ் கேட்டுக்கொண்டார்.

