
ஈப்போ டிச 29-
ஐயப்ப பக்தியில் ஒன்றிணைந்த நான்கு மாநிலங்கள்
சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பனின் அருளால், 2025 பேரா , ஆயர்தாவார் புன்னிமாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டு மையத்தில், மலேசியா ஐயப்பா சேவா சங்கம் பேராக் மாநிலம் (Malaysia Ayyappa Seva Sangam Perak– MASS Perak) ஏற்பாட்டில் விசேஷ மண்டலம் பூர்த்தி பூஜை 2025 மிகச் சிறப்பாகவும், ஆன்மிக விமரிசையுடனும் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த புனித பூஜைக்கு சுமார் 2,000 ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு, ஐயப்பனின் திருவருளைப் பெற்றனர்.

பக்தர்களின் பெரும் திரளான பங்கேற்பு இந்த நிகழ்வின் ஆன்மிக மகத்துவத்தை மேலும் உயர்த்தியது.
இந்த பூஜைக்கு நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்பா சேவா சங்கங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் சிறப்பாக அமைந்தது.
அவை:
உலு சிலாங்கூர் தர்ம சாஸ்தா சேவா சங்கம்,
பட்டு உபான் ஐயப்பா சேவா சங்கம் பினாங்கு,
பஹாங் ஐயப்பா தத்துவமசி சேவா சங்கம்,
ஸ்ரீ ஹரிவராசனம் சேவா சங்கம் அம்பாங் – சிலாங்கூர்,
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கேரளா மாநிலம் பந்தளம் ராஜ பரம்பரையைச் சேர்ந்த, சபரிமலை தர்ம சாஸ்தா ராஜ வம்சத்தினரான திரு ராஜ ராஜ தம்புரான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பூஜைக்கு தலைமை தாங்கி சிறப்பித்தார்.

இந்த விசேஷ மண்டலம் பூர்த்தி பூஜையின் போது, ஐயப்பனுக்காக நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் சுமார் 20 குருசாமிகளுக்கு ஆன்மிக அங்கீகாரமாக மூன்று பிரிவுகளாக பட்டங்கள் வழங்கப்பட்டன.
அவை:
தர்ம ஐயப்பா அடியார்
ஜோதி தர்ம தாசன்
ஆன்மிக ஐயப்பா சேவகர்
இந்த பட்டங்கள் அனைத்தும் திரு ராஜ ராஜ தம்புரான் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டு, நிகழ்வுக்கு மேலும் பெருமை சேர்த்தது.

நிகழ்ச்சி முழுவதும் ஆன்மிக ஒற்றுமை, ஐயப்ப பக்தி, பக்தர்களின் ஒழுக்கமான பங்கேற்பு ஆகியவை கண்கூடாக வெளிப்பட்டன.
இந்தப் புனித நிகழ்வு சிறப்பாக நடைபெறகாரணமான நான்கு மாநில ஐயப்பா சேவா சங்கங்களுக்கும், மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற புன்னிமாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டு மையத்தின் உரிமையாளர்களுக்கும், மலேசியா ஐயப்பா சேவா சங்கம் (பேராக் மாநிலம்) சார்பில் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் அகிலன் குருசாமி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

