மொழிச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர் வேண்டுகோள்

பெந்தோங், ஜன 22 – நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு, மொழி தொடர்பான சர்ச்சைகளை இனியும் தொடர வேண்டாம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.

பெந்தோங்கில் உள்ள எஸ்.ஜே.கே.சி (SJKC) பெர்த்திங் சீனப் பள்ளியில் இன்று நடைபெற்ற சமூக நல நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவின் தற்போதைய கல்வி முறையில் பின்பற்றப்படும் பன்மொழி அணுகுமுறை, தேசிய மொழியான  மலாய் மொழியின் (Bahasa Melayu) அந்தஸ்தை ஒருபோதும் தரம் தாழ்த்தாது என்று பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மாறாக, இந்த முறை மாணவர்களிடையே தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும், உலகளாவிய ரீதியில் அவர்கள் போட்டியிடுவதற்குத் தேவையான பன்மொழித் திறனை வழங்கவுமே முன்னெடுக்கப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

“மொழி விவகாரங்களில் இனங்களுக்கு இடையே முடிவற்ற சர்ச்சைகள் உருவாவதை அரசாங்கம் விரும்பவில்லை. நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே எங்களின் முதல் முன்னுரிமை,” என்று அவர் கூறினார்.

உலகச் சந்தையில் தடம் பதிக்க ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளின் ஆளுமை மிக அவசியமானது என்றாலும், நாட்டின் அடையாளமான தேசிய மொழியில் அனைவரும் புலமை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்பதற்கான உரிமையையும் வாய்ப்பையும் அரசாங்கம் எப்போதும் உறுதி செய்யும் எனக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் நோக்கமாகக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles