கூர்மையான ஞானவேல் கொண்டு நவீன உலகின் சவால்களை வெல்வோம் – டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோலாலம்பூர், ஜன 31-

பக்திப் பரவசத்துடனும், ஆன்மீக எழுச்சியுடனும் கொண்டாடப்படும் உன்னதமான தைப்பூசத் திருநாளில், மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பக்தர்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

“தீமையை அழித்து நன்மையைக் காக்க, அன்னை பராசக்தியிடம் ‘வேல்’ பெற்று முருகப்பெருமான் வெற்றி வாகை சூடிய இந்த நன்னாள், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அறியாமை என்னும் இருள் நீங்கி, அறிவு எனும் ஒளி பிறக்க வழிகாட்டட்டும்.

இன்று உலகம் நான்காம் தொழில் புரட்சியைக் கடந்து, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆதிக்கம் நிறைந்த ஒரு புதிய யுகத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இம்மாற்றங்களை வெறும் சவால்களாகப் பார்க்காமல், நமது சமூகத்தின் பொருளாதார உயர்வுக்குக் கிடைத்த பெரும் வாய்ப்புகளாகக் கருதி அவற்றை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp வழியாக 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘வெற்றி மடானி’ (VETRI MADANI) எனும் சிறப்புத் திட்டத்தை, பொங்கல் பண்டிகையின்போது நாம் அறிமுகப்படுத்தினோம். இத்திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்களின் எதிர்காலத் தேவைக்கான டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சிகள் (Upskilling) மற்றும் மறுதிறன் பயிற்சிகள் (Reskilling) வழியாக, நமது பணியாளர்கள் உலகளாவிய பொருளாதாரச் சந்தையில் நம்பிக்கையுடன் போட்டியிடுவதை இத்திட்டம் உறுதி செய்யும்.

மனிதவள அமைச்சராக, நமது இந்தியச் சமூகம் குறிப்பாக இளைஞர்கள் ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் சிறந்த ஆளுமை பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். முருகப்பெருமானின் ‘ஞானவேல்’ எவ்வாறு ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதோ, அதேபோல் நமது அறிவாற்றலும் தொழில்நுட்பத் திறன்களும் விரிவடைய வேண்டும். இதுவே நமது சமூகம் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைய வழிவகுக்கும்.

மாறிவரும் இந்தத் தொழில் புரட்சிக் காலத்தில், தொடர்ச்சியான கற்றல் மிக அவசியம். நமது பாரம்பரிய விழுமியங்களை மறக்காமல், நவீன அறிவியலைத் துணைக்குக் கொண்டு நாம் முன்னேற வேண்டும். இந்தத் தைப்பூசத் திருநாள் நமது சமூகத்தின் அறிவுசார் புரட்சிக்கும், பொருளாதார மேன்மைக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும்.

இறுதியாக, பத்துமலை மற்றும் நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டுகிறேன். ‘மலேசியா மடானி’ எனும் உயரிய தத்துவத்தின் கீழ் ஒரு வலிமையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகமாக நாம் ஒன்றிணைந்து பயணிப்போம். வெற்றிவேல், வீரவேல்!”

இவ்வாறு, பிகேஆர் தேசிய உதவித் தலைவருமான டத்தோஶ்ரீ ரமணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles