
கோலாலம்பூர், பிப் 7: 2026-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நெடுஞ்சாலை சலுகை நிறுவனங்களுக்கு ஈட்டுத்தொகையாக RM19.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டுடன் 50 சதவீத சுங்கக்கட்டணத் தள்ளுபடி வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
பல்வேறு இன மற்றும் மத மக்களின் ஒற்றுமை மற்றும் நலனைப் பேணும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இந்த சுங்கக்கட்டணத் தள்ளுபடி பிப்ரவரி 14-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி, பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடையும். சீனப் புத்தாண்டு மற்றும் வரவிருக்கும் ரமலான் மாதத்தை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்கள் அல்லது விடுமுறைக்குச் செல்பவர்களின் பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

