

கோலாலம்பூர் பிப் 15
மலேசிய இந்து சங்கம் (MHS) மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) இணைந்து, பல இந்து தொண்டர்கள் அமைப்புகள் மற்றும் குழுவின் ஆலய அமைப்புகளின் ஆதரவுடன் தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டதை மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் சங்கபூசன் தங்க கணேசன் இன்று அறிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் நில உரிமை பிரச்சினைகளால் ஆலயங்கள் இடிப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் சூழலில் கவலை மற்றும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதனை தீர்க்கும் நோக்கில், இந்த குழு அடுத்த 6 மாதங்களில் ஆலயப் பிரச்சினைகளுக்கான “வெள்ளைப்படுத்துதல்” (regularisation/whitening) செயல்முறையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
செயல் திட்டம்
1. முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் நிரப்ப வேண்டிய புதிய Google Form ஆய்வு தொடங்கப்படும்.
2. அந்தத் தரவின் அடிப்படையில் ஆலயங்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
3. அதன் பின்னர் குழு நேரடியாக ஆலயங்களைச் சந்தித்து வழிகாட்டுதல் மற்றும் சட்ட உதவி வழங்கும்.
இந்த கட்டுமானமான அணுகுமுறையின் மூலம் பல ஆலயங்களை சட்டப்பூர்வமாக்க முடியும் என நம்பிக்கையை குழு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திடம் கோரிக்கை
குழு அரசாங்கத்திடம் பின்வரும் அவசர கோரிக்கைகளை முன்வைக்கிறது:
- ஆலய இடிப்பு நடவடிக்கைகளுக்கு 6 மாத இடைக்காலத் தடை (moratorium) வழங்க வேண்டும்.
- இடிப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட மத மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்; இந்நிகழ்வுகளில் திறந்த இடிப்பு சமுக உணர்வுகளை புண்படுத்தும்
- ஒரு ஆலயம் என்பது கட்டிடம் அல்லாது சிலை மட்டுமல்ல — அது மக்களின் நம்பிக்கையும் ஆன்மிக வாழ்வும் ஆகும் என்று அவர் சொன்னார்.
மறு இடமாற்றம் தொடர்பாக
ஒரு ஆலயம் இதில் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால்:
- தெய்வங்கள் முறையான ஆகம சட்டங்களுடன் மாற்றப்படும் பின்னர் மட்டுமே இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
தேசிய ஒற்றுமை, மத மரியாதை மற்றும் சட்டப்பூர்வ தீர்வுகளை உறுதி செய்வதற்காக, ஆலய இடிப்பு மற்றும் மாற்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் 6 மாத இடைக்கால தடை விதித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என குழு மீண்டும் வலியுறுத்துகிறது என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்து சங்கத்தின் அலுவலக மண்டபத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன்,ஆகம அணி தலைவர் அருண் துரைசாமி, மலேசிய இந்து தர்ம மாமன்றம் தலைவர் ரிஷி குமார், மலேசிய இந்து வழக்கறிஞர்கள் மற்றும் தலைவர் வழக்கறிஞர் ஆர்.வி லிங்கம் உட்பட பல இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

