
கோலாலம்பூர், பிப்.27-
நாட்டில் கிக் பொருளாதாரச் சூழல் அமைப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மிகவும் நிலையான, சமத்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய பணிச் சூழலை உறுதி செய்யும் நோக்கில், அதன் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அண்மையில் கிராப் (Grab), ஃபுட்பாண்டா (Foodpanda), கோகெட் (GoGet), ஷோப்பீஃபுட் (ShopeeFood), லாலாமூவ் (Lalamove), போல்ட் (Bolt), ஹாலோ டெலிவரி (Halo Delivery), கிடோகேர் (Kiddocare) மற்றும் ஃபாஸ்ட்கிக் (FastGig) உள்ளிட்ட முன்னணி கிக் இயங்குதள நிறுவனங்களுடன் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, கிக் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் நலன் மற்றும் சேவை வழங்கல் இயங்குதளங்களுக்கான சட்டப்பூர்வ இணக்கப்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“முன்னதாக கிக் தொழிலாளர்களுடன் நடத்தப்பட்ட அமர்வில் முன்வைக்கப்பட்ட அனைத்து விவகாரங்களும், தொழிலாளர் பிரதிநிதிகள் உள்ளிட்ட இதர பங்குதாரர்களின் கவனத்திற்கு அடுத்தகட்டமாக கொண்டு செல்லப்படும். இது ஒரு விரிவான, சமநிலையான தீர்வை எட்ட வழிவகுக்கும்,” என்று அவர் நேற்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்குமான பொதுவான செழுமையை இலக்காகக் கொண்டு, தொழிலாளர்களின் நலன்களுக்கும் இயங்குதள நிறுவனங்களின் வணிக நிலைத்தன்மைக்கும் இடையே ஒரு நியாயமான சமநிலையைப் பேணுவதில் மடாணி அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதே வேளையில், கிக் பொருளாதார வளர்ச்சியைத் தேசிய மனித மூலதனத் திட்டத்துடன் ஒருங்கமைப்பதிலும் அமைச்சரவை கவனம் செலுத்தி வருவதாக டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மேலும் கூறினார்.

