
ஈப்போ, மார்ச் 13-
எழுத்தாளர்,வாசகர்களையும் உருவாக்கும் பெரும் இலக்கோடு நகர்ந்து கொண்டிருக்கும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அச்சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் சிவாலெனின் தெரிவித்தார்.
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்து சார்ந்து மட்டுமின்றி பண்பாடு சார்ந்தும் அதன் இலக்கை நோக்கி நகர்வதாகவும் கூறிய அவர் இனி ஒவ்வொரு ஆண்டும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் பொங்கல் தமிழர் திருநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல்,தமிழர் திருநாள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற சிவாலெனின் தனதுரையில் இதனை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி, நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இன்றைய இளம் தலைமுறையிடம் கொன்டுச் சேர்க்கும் கடமையும் நமக்கு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மேலும், இளம் எழுத்தாளர்களை உருவாக்குவதிலும் சங்கம் தீவிர முனைப்பு காட்டி வருவதாக கூறிய அவர் இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டவும் பயிலரங்கங்களை முன்னெடுக்கவும் அயத்தப்பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 13 எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட “காற்றிலாடும் இறகின் திசை” என்னும் சிறுகதை தொகுப்பினை வெளியீடு செய்யவிருப்பதாகவும் அதற்கு சங்க உறுப்பினர் தொடங்கி,பொது மக்கள்,பொது அமைப்பினர்,ஆசிரியர்கள்,வாசகர்,எழுத்தாளர் என அனைத்து தரப்பின் ஆதரவும் வேண்டுமெனவும் சிவாலெனின் தனதுரையில் கோரிக்கை விடுத்தார்.
தமிழ் வாழ்த்தோடு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பொங்கல் வைத்து மகிழ்ச்சியாய் தொடங்கிய வேளையில் சங்கத்தின் துணைத்தலைவரும் நிர்வாகத்தின் ஆலோசகருமான ஆசிரியர் திரு.ச.முனியாண்டி வரவேற்புரை ஆற்றி சங்கத்தின் நடப்பு செயல்பாடுகள்,முன்னெடுப்புகளை எடுத்துரைத்து பேசினார்.
கடந்த ஜூன் 2025 முதல் பொறுப்பேற்ற நடப்பு நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் மாநில நிலையில் தொடங்கி தேசிய நிலையிலும் முன்னெடுத்திருப்பதை சுட்டிக்காண்பித்து பேசிய அவர் இனி வருங்காலங்களிலும் அவை அனைத்துலக நிலையில் சிறகை விரிக்கவிருப்பதையும் அகம் மகிழ்ந்து குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை ஆக்கப்பூர்வமாக ஆசிரியரும் சங்கத்தின் செயலவை உறுப்பினருமான திருமதி.புவனேஸ்வரி வழி நடத்த பாவலர் முத்துப்பாண்டி,கவிஞர் இராதை சுப்பையா மற்றும் கவிஞர் மொழிப்பித்தன் ஆகியோர் பொங்கல் சிறப்பு கவிதையும் வாசித்தனர்.

