
நாட்டில் உணவகங்களில் பணிபுரிய 40,512 அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
ஜனவரி 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை 2 லட்சத்து 30,420 அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் உணவகங்களில் மட்டும் வேலை செய்ய 40,512 பேருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பல உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசிய இந்திய மற்றும் முஸ்லிம் உணவகங்களுக்கு உதவும் வகையில் இப்போது மனித வள அமைச்சு – உள்துறை அமைச்சு மூலம் அந்நிய தொழிலாளர்கள் தருவிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் உணவகங்கள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வரும் மனித வள அமைச்சர் வ சிவகுமார் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் ஆகியோருக்கு பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

