ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து வெளியேற மலேசிய எண்ணெய் கப்பலுக்கு ஈரான் அனுமதி

ஷா ஆலம், மார்ச் 27: முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்களுக்குப் பிறகு, அங்கிருந்து தனது எண்ணெய் கப்பலையும் உள்ளூர் ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை மலேசியா மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.

அப்பகுதியில் நாட்டின் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சூழ்நிலையை நிர்வகிக்கும் முயற்சிகளை எளிதாக்கிய ஈரானின் ஒத்துழைப்புக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“வழிவிடுவதற்கு முன்கூட்டியே ஒப்புக்கொண்ட ஈரான் அதிபருக்கு நன்றி கூற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். தற்போது, மலேசிய எண்ணெய் கப்பலையும், சம்பந்தப்பட்ட ஊழியர்களையும் விடுவிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நாட்டின் தயார்நிலையை வலுப்படுத்தும் உத்திகள் குறித்த சிறப்புரையின் போது அவர் இவ்வாறு கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் மோதல் மற்றும் தடைகள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ளதாகவும், அதன் தாக்கத்தை மலேசியாவும் உணர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

“தற்போதைக்கு, ஹார்முஸ் ஜலசந்தியிலுள்ள தடைகள், போர் மற்றும் தடைபட்ட எண்ணெய், எரிவாயு விநியோகத்தின் தாக்கங்களை நாம் சமாளிக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தும் நம்மை பாதிக்கின்றன.”

“இருப்பினும், பெட்ரோனாஸின் திறமையால் நாம் மிகவும் சிறந்த நிலையில் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட போதிலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, தேசிய பெட்ரோலிய நிறுவனத்தின் திறன் நாட்டை நிலையாக வைத்திருக்க உதவுகிறது என்று அன்வார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles