
கோலாலம்பூர், மார்ச் 29-
பத்து மலை–மாரான் பங்குனி உத்திரம் புனித பாதயாத்திரையை அனைத்துலக ஆன்மீக நிகழ்வாக நிலைநிறுத்த வேண்டியது அவசியம் என மூடா (MUDA) மலேசியாவின் உதவி தலைவர் டாக்டர் சிவ பிரகாஷ் வலியுறுத்தினார்.
204 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாதயாத்திரையில் சுமார் 2,000 பக்தர்கள் பங்கேற்றது பாராட்டத்தக்கது என்றும், இது உடல் மற்றும் மன உறுதியை மட்டுமல்லாமல், மலேசியர்களிடையேயான ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பயணத்தின் போது இன, மத வேறுபாடின்றி உள்ளூர் மக்கள் வழங்கிய உதவிகள், நாட்டின் சமூக நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துகின்றன. இது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் முக்கிய பலமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியை முன்னெடுக்க தேசிய ஒற்றுமை அமைச்சு, இளைஞர்-விளையாட்டு அமைச்சு, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் மற்றும் பாதயாத்திரை வழித்தடத்தில் உள்ள ஊராட்சி துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.
அரசு மற்றும் சமய அமைப்புகள் இணைந்து பாதுகாப்பு, வசதி, சர்வதேச விளம்பரம் உள்ளிட்ட அம்சங்களில் திட்டமிட்டு செயல்பட்டால், இந்த பாதயாத்திரையை உலகளாவிய அளவிற்கு உயர்த்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பத்து மலை தைப்பூசம் ஆண்டுதோறும் 2.5 மில்லியன் பேரை ஈர்த்துவரும் நிலையில், மலேசியா பெரிய அளவிலான ஆன்மீக சுற்றுலாவை முன்னெடுக்கக்கூடிய திறன் கொண்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி மலேசியாவின் கலாச்சார ஒற்றுமையையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

