அமைச்சரும் ஜ.செ.க தேசியத் தலைவருமான கோபிந்த் சிங் டியோவின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புத்ரா ஜெயா, ஏப் 14-
அன்பு மலேசிய சகோதரர்களுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தத் தமிழ் புத்தாண்டான சித்திரைப் புத்தாண்டு, நமது கடந்த கால சாதனைகளைத் திரும்பிப் பார்ப்பதற்கும், பிரகாசமான, வளமான எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துவதற்கும் முக்கியத் தருணமாக அமைகிறது.

இலக்கவியல் அமைச்சில், எந்த ஒரு பாகுபாடுமின்றி, ஒவ்வொரு மலேசியரும் வருங்காலத்தை நோக்கிய தொழில்நுட்பப் புத்தாக்கதில் வலுப்பெறுவதை உறுதி செய்வதில் நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்.

இலக்கவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், நமது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, நாட்டை மேம்பாடடையச் செய்வதே எங்கள் இலக்காகும்.

இந்தப் புதிய வருடத்தை நாம் கொண்டாடும் அதே வேளையில், நம்மைச் சுற்றி நிகழும் உலகின் சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கில் தொடரும் மோதலானது உலகளாவிய நிலையில் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது, அதன் தாக்கம் நமது நாட்டிலும் உணரப்படுகிறது. எரிசக்தி விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் நிலையில்லா ஏற்ற இறக்கங்கள், நமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையில், மக்களுக்குப் பெரும் சுமையாக அமையுவதோடு நமது அன்றாட வாழ்க்கையையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

மடானி அரசாங்கம் இந்தப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக அயராது உழைத்து வருகிறது, இருந்தாலும், மக்களின் ஆதரவில்லாமல், எங்களால் இந்தச் சவாலை எதிர்கொள்வது கடினம்.

உலகளாவிய ரீதியில் நிலைத்தன்மையில்லாத காலகட்டத்தில், ஒவ்வொரு மலேசியரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. நமது எரிசக்திப் பாதுகாப்பையும் பொருளாதார மீட்சியையும் உறுதி செய்ய, நாம் விவேகத்துடன் செயல்படுவதோடு மட்டும் அல்லாமல், அரசின் முன்னெடுப்புகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வலிமையையும் தாண்டி, சமூக நல்லிணக்கமே நமது மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. தற்போதைய காலகட்டத்தில், நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக, வேறுபாடுகளைக் களைந்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டிருப்பது இன்றியமையாததாகும்.

நிலைத்தன்மையில்லா உலகச் சூழலில், பரஸ்பர மரியாதையும் சுபீட்சமான சூழலை உருவாக்க நாம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளுமே, வரும் தலைமுறையினருக்காக, இந்த நாட்டில் நாம் உருவாக்கும் நிலையான பாதுகாப்பான அடித்தளமாகும்.

புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தை குறிப்பது போலவே பேதத்தைக் கடந்த ஒற்றுமையான மலேசியாவாக புதுப்பிக்கப்பட்ட உணர்வையும் குறிக்கட்டும்.
நாம் நமது குடும்பத்தினருடன் கலாச்சார உணவுகளை உண்டு மகிழ்ந்து, பெரியோர்களின் ஆசி பெற ஒன்றுகூடும் இந்த வேளையில் உலக அமைதிக்காகவும், நமது அன்புக்குரிய மலேசியாவின் நல்லிணக்கம் நிலைத்திருக்கவும் பிரார்த்திப்போம்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கு இனிய வைசாகி மற்றும் விஷு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !

மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ
இலக்கவியல் அமைச்சர்,
ஜ.செ.க தேசியத் தலைவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles