


செ வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் மே 15-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நடைபெற்று வரும் பரதன் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நாளை மே 16 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு செராஸ் கால்பந்து அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இம்முறை பரதன் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் குழுவை எதிர்த்து மலாக்கா மோதுகிறது.
பரதன் கிண்ண வரலாற்றில் அதிக முறை கிண்ணத்தை வென்ற பெருமை சிலாங்கூர் குழுவுக்கு இருக்கிறது.
அதேசமயம் சிலாங்கூர் குழுவை வீழ்த்தி பரதன் கிண்ணத்தை வென்று வரலாறு படைக்க மலாக்காவும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்குகிறது.
செராஸ் அரங்கில் இறுதி ஆட்டம் நடைபெறுவதால் சிலாங்கூருக்கு ஆதரவு தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் கூடலாம்.
இருப்பினும் இரு குழுக்களும் இளம் நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்டிருப்பதால் இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கலாம்.
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு தலைமையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தை காண ரசிகர்கள் செராஸ் அரங்கை நோக்கி படையெடுக்கும் படி போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ பதி கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய கால்பந்து சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு இந்தியர் கால்பந்து போட்டியாக பரதன் கிண்ணம் விளங்குகிறது.
நாளை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பரதன் கிண்ணத்தை வெல்லும் குழுவுக்கு 20,000 வெள்ளி வெகுமதி மாக வழங்கப்படும்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 10,000 வெள்ளி காத்திருக்கிறது.
சிறந்த ஆட்டக்காரர், சிறந்த கோல் கீப்பர், சிறந்த நட்சத்திர வீரர், கோல் மன்னன் விருதுகள் உட்பட பெர் பிளே விருதும் நாளை வழங்கப்படுகிறது என்று டத்தோ பதி குறிப்பிட்டார்

