
சுங்கைபட்டாணி, மே 25 –
சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் நிர்வாகத் தேர்தலில் பெ.இராஜேந்திரன் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தங்களது சேவையை தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தலில் தேவஸ்தானத் தலைவர் பெ.இராஜேந்திரன் மற்றும் பொருளாளர் ந.பத்மநாதன் ஆகியோர் போட்டியின்றி தங்களது பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டனர்.
துணைத்தலைவர் பதவிக்காக ஆசிரியர் சங்கரன் மற்றும் தமிழ்ச்செல்வன் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் நடப்புத் துணைத்தலைவராக இருந்த ஆசிரியர் சங்கரன் மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
செயலாளர் பதவிக்கான போட்டியில் துரைசிங்கம் வெற்றி பெற்றார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துணைச்செயலாளர் பதவிக்கான போட்டியில் எம்.இராதகிருஷ்ணன் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
செயற்குழு உறுப்பினர்களாக கு.அன்பரசன், அசோக்குமார் தனபாலன், விஜய்குமார் சிம்மாசலம், இராமச்சந்திரன் மகாலிங்கம், வேலு நாகமுத்து, செல்வம் கோபால், முருகன் இராமசாமி, கந்தையா காளிமுத்து, மகேந்திரன் குருசாமி மற்றும் இந்திரன் ரெங்கையா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
உட்கணக்காய்வாளர்களாக இரமேஸ் சுப்பிரமணியம் மற்றும் ஆத்மநாதன் பெரியண்ணன் ஆகியோர் போட்டியின்றி பதவியேற்றனர்.

இதனிடையே, சமீபத்தில் வெளியான எஸ்பிஎம் தேர்வின் முடிவுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 12 மாணவர்களுக்கு சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் கல்வி ஊக்குவிப்புத் தொகையை வழங்கியது.

