
புத்ராஜெயா, ஜூன் 7-
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகளை (திவெட் 2.0) வலுப்படுத்துவதற்காக, திறன் மேம்பாட்டு நிதி கழகத்தின் வாயிலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் நிதியை முழுமையாகப் பயன்படுத்த மனிதவள அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தேசிய திவெட் தின 2026 கொண்டாட்டத்தின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மனதார வரவேற்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீடு, நாட்டின் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் திறமையான மற்றும் உறுதியான மனிதவளத்தை உருவாக்குவதற்கான ‘மடானி’ அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், திவெட் துறையைத் திறமையான பணியாளர்களுக்கான முக்கியத் தொழில்முறைப் பாதையாக மாற்றவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
13-வது மலேசியத் திட்டம், புதிய தொழில்துறை பெருந்திட்டம் மற்றும் தேசிய எரிசக்தி மாற்றத் திட்டம் ஆகியவற்றின் இலக்குகளுடன் இந்த முயற்சி ஒத்துப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குத் திறன்களை மேம்படுத்தி, அதிக மதிப்புள்ள பொருளாதாரத் துறைகளில் பங்கேற்க வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மேலும், இது மலேசியாவின் போட்டித்திறனை அதிகரிப்பதோடு, வட்டார அளவில் திறமையான பணியாளர்களுக்கான மையமாக நாட்டை நிலைநிறுத்தும் என்றும் அமைச்சர் ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய திவெட் கவுன்சில் மற்றும் திறன் மேம்பாட்டு நிதி கழகத்தின் மேற்பார்வையில் இந்த நிதி செலவிடப்படும். குறிப்பாக மின்சாரம் மற்றும் மின்னணுவியல், பசுமைப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம் மற்றும் ஆரஞ்சுப் பொருளாதாரம் போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அரசு, தொழில்துறை மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு, திவெட் திட்டங்களை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

