
கோலாலம்பூர் ஜூலை 16-
மக்களின் நலனுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய, 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ‘பக்கத்தான் ஹராப்பான்’ (PH) கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘பக்கத்தான் ஹராப்பான்’ கூட்டணியின் தலைவருமான அன்வார், வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், நெகிரி மாநில, மத்திய அரசுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு பல மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் — அல்லது ‘டோக் மின்’ (Tok Min) — 2018 முதல் நேர்மை, பணிவு, வலுவான பொறுப்புணர்வுடன் நெகிரி செம்பிலானை இறையருளால் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
“மிகவும் பணிவுடன், ‘டோக் மின்’ தலைமையிலான ‘ஹராப்பான்’ கூட்டணி மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு நெகிரி செம்பிலான் மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாம் இணைந்து கட்டியெழுப்பிய முன்னேற்றம் பாதியிலேயே நின்றுவிட அனுமதிக்காதீர்கள்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

