
ஜெராம் படாங், ஜூலை 20:
ஜெராம் படாங் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தரமான, நவீன மற்றும் முழுமையான அடிப்படை வசதிகள் வழங்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என அதன் வேட்பாளர் மணிவண்ணன் கோவின் கூறினார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படை வசதிகள் மிகவும் அவசியமானவை என்பதால், மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண உறுதிபூண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையின் கீழ், சேதமடைந்த மற்றும் பழுதடைந்த சாலைகளை மேம்படுத்துதல், போதுமான சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், மின்சார விநியோகத்தை மேலும் நிலையானதாக மாற்றுதல் மற்றும் அதிவேக இணைய சேவையை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்துதல் ஆகியவை முக்கிய முன்னுரிமைகளாக இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, குடிநீர் விநியோகப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கிய இலக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக சுங்கை ராயா உள்ளிட்ட சில பகுதிகளில் மக்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை குடிநீர் இன்றி அவதிப்பட்டுள்ளதாகவும், ஜெராம் படாங் பகுதிகளில் பல இடங்களில் குறைந்த நீர் அழுத்தம், நிலையற்ற நீர் விநியோகம் மற்றும் அடிக்கடி ஏற்படும் தடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தொடர்புடைய அரசுத் துறைகளுடன் இணைந்து, இந்தப் பிரச்சினைக்கு விரைவாகவும் நிரந்தரமாகவும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பமும் போதுமான, நிலையான மற்றும் தரமான குடிநீர் வசதியைப் பெறுவதை உறுதி செய்வதே பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்றும் மணிவண்ணன் குறிப்பிட்டார்.

