தேர்தலுக்கான கூட்டணி நிலைத்தன்மையை தராது; மக்கள் நம்புவது பக்கத்தான் ஹரப்பானையே – டாக்டர் குணராஜ்

சிரம்பான் ஜூலை 25-
தேசிய முன்னணி–தேசிய கூட்டணி இடையிலான அரசியல் ஒத்துழைப்பு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக மட்டுமே என அம்னோவின் உதவி தலைவர் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்திருப்பது, அந்த கூட்டணியின் நிலைத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்களில் இணைந்து செயல்படாத இரண்டு அரசியல் அணிகள், தேர்தல் நேரத்தில் மட்டும் இணைவது மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய அரசியல் அணுகுமுறை அல்ல.

இது வாக்காளர்களுக்காக உருவாக்கப்பட்ட கொள்கை கூட்டணி அல்ல; தேர்தல் வெற்றிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக அரசியல் ஏற்பாடு என்பது தெளிவாகிறது.
நெகிரி செம்பிலான் மக்கள் அரசியல் நிலைத்தன்மையையும், தெளிவான நிர்வாக திசையையும் எதிர்பார்க்கின்றனர்.

தேர்தலுக்காக மட்டும் உருவாகும் கூட்டணிகளை விட, மக்களின் நலன், பொருளாதார முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ச்சியாக செயல்படும் பக்கத்தான் ஹரப்பானை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

பக்கத்தான் ஹரப்பான் மற்றும் ஒற்றுமை அரசு, நாட்டின் நிலைத்தன்மை, மக்களின் முன்னேற்றம் மற்றும் பல இன மக்களின் நலன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்திய சமூகத்தின் கல்வி, தொழில், இளைஞர் முன்னேற்றம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மக்கள் தற்காலிக அரசியல் கணக்குகளை அல்ல, நிலையான நிர்வாகத்தையும் நம்பகமான எதிர்காலத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.

தேசிய முன்னணி ( BN) –தேசிய கூட்டணி (PN) ஒத்துழைப்பு தேர்தலுக்காக மட்டுமே என்ற உண்மை வெளிப்படையாக கூறப்பட்டுள்ள நிலையில், பக்கத்தான் ஹரப்பானின் நிலைத்தன்மை, தெளிவான அரசியல் பாதை மற்றும் மக்கள்மைய நிர்வாகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles