
சிரம்பான், ஜூலை 26-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசியக் கூட்டணி தேர்தல் அமைப்பின் தலைவர் முகமட் சனுசி முகமட் நோர் வெளியிட்ட இனவாத கருத்து தொடர்பில் போலிஸ் படையும் சட்டத்துறை தலைவர் அலுவலகமும் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலாங்கூர் மாநில கெஅடிலான் தேர்தல் அமைப்பின் தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் நடராஜன் இதனை வலியுறுத்தினார்.
சனுசி தனது தேர்தல் பிரச்சார உரையின்போது, இந்தியர்களுக்கு இந்தியாவும், சீனர்களுக்கு சீனாவும் இருக்கிறது; மலாய்க்காரர்களுக்கு தானா மெலாயு மட்டுமே உள்ளது என்ற வகையிலான கருத்தை வெளியிட்டார்.

இந்தச் சூழலில் சனுசியின் கருத்து நாட்டின் பல்லின ஒற்றுமை உணர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், குறிப்பாக முஸ்லிம் அல்லாத சமூகங்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் உருவாக்கியுள்ளதாக டாக்டர் சத்யபிரகாஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக தாம் போலிசில் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 3ஆர் (இனம், மதம், அரச குடும்பம்) தொடர்பான உணர்வுபூர்வ விவகாரங்களில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
நாட்டின் அமைதியும் சமூக நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், இத்தகைய இனவாத கருத்துகளுக்கு எதிராக எந்தத் தயக்கமும் இன்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரச மலேசிய போலிஸ், சட்டத்துறை தலைவர் மீது முழு நம்பிக்கை வைத்தே இந்தப் புகாரை அளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.
மேலும், தேர்தல் காலங்களில் அரசியல் ஆதாயத்திற்காக இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாகவும், அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடு பல இன, பல மத மக்களின் ஒற்றுமையால் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டாக்டர் சத்யபிரகாஷ், தேர்தல் பிரச்சாரங்களிலும் அந்த ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையிலான கருத்துகளே முன்வைக்கப்பட வேண்டும் என இன்று சிரம்பான் போலீஸ் தலைமையகத்திற்கு நேரில் சென்று விளக்கமளித்த பின்னர் பேசிய டாக்டர் சத்யபிரகாஷ் கூறினார்.

