செமிகண்டக்டர் துறையில் ஆழமான ஒத்துழைப்பு : பிரதமர் அன்வார் -மோடி பேச்சுவார்த்தை

புதுடில்லி, செப்டம்பர் 14 – மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களும், மின்கடத்தி ( செமிகண்டக்டர்) துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், அதனை தொழில்துறை கூட்டு ஒத்துழைப்பாக மாற்றுவது குறித்தும் விவாதித்தனர்.

18-வது பிரிக்ஸ் (BRICS) தலைவர்கள் கலந்து கொண்ட உச்சநிலை மாநாட்டின் இடையே, அவ்விரு தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது.

ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலி, திறன் மேம்பாடு இருதரப்பு முதலீடு ஆகியவை குறித்து அன்வார் அந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது முக்கியமாகப் பேசினார்.

இருவழி வர்த்தகத்தையும் முதலீட்டையும் மேம்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, இந்தியாவிற்கான மலேசியாவின் ஏற்றுமதியை எளிதாக்கி விரைவுபடுத்துவது போன்ற விவகாரங்களில் மலேசியாவின் கடப்பாட்டினை நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

18-வது பிரிக்ஸ் (BRICS) தலைவர்கள் கலந்து கொண்ட உச்சநிலை மாநாட்டின் இடையே, பிரதமர் அன்வாரும் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இருவழி சந்திப்பை நடத்தினர்.
விமானத் தொடர்பை அதிகரிப்பதன் மூலம் சுற்றுலா மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்தும் அவர் பேசினார்.

தமது வருகையின்போது, மலேசியா – இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிரதமராக அன்வார், இந்தியாவிற்கு மேற்கொண்டிருக்கும் இரண்டாவது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு ஆகஸ்ட் 2024 -இல் அவர் முதன்முறையாக இந்தியா சென்றிருந்தார்.

‘பிரிக்ஸ்’ அமைப்பின் பங்காளி நாடு’ என்ற முறையில் புதுடில்லியில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் மலேசியா பங்கேற்றது.

மலேசியாவும் இந்தியாவும் 1957 -ஆம் ஆண்டு முதல் நீண்டகால உறவினைப் பேணி வருகின்றன.

கடந்த ஆண்டு மலேசியாவின் ஒட்டுமொத்த இரு தரப்பு வர்த்தகம் 79.49 பில்லியன் மலேசிய ரிங்கிட்டை (RM79.49 billion) எட்டிய நிலையில், தெற்காசியாவில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.

மலேசியா, செம்பனை எண்ணெய் மற்றும் செம்பனை எண்ணெய் சார்ந்த விவசாய உற்பத்தி பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

அந்நாட்டிலிருந்து விவசாய உற்பத்தி, பெட்ரோலியம், இராசயனம் ஆகியவற்றை மலேசியா இறக்குமதி செய்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles