


சென்னை,ஏப் 1-
இந்திய அரசின் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக சென்னைக்கு வருகை புரிந்திருக்கும் மலேசியாவின் மனித வள அமைச்சர் வ.சிவகுமார் இன்று சென்னையில் உலகப் புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகைப் புரிந்தார்.
புற்றுநோய் மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக, சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை புரிந்த அவருக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விரிவான விளக்கங்களை வழங்கியது.
புற்று நோயாளிகளுக்கு நவீன தொழில் நுட்ப முறையில் எவ்வாறு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுவது என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவல்களை மனித வள அமைச்சர் சிவகுமார் மிக உன்னிப்புடன் செவிமெடுத்தார்.
புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நவீன தொழில் நுட்ப கருவிகளையும் அமைச்சர் உட்பட மலேசிய பேராளர்கள் குழு நேரில் பார்வையிட்டது.
மனித வள அமைச்சின் துணை நிர்வாக இயக்குனர் டத்தோ ரஸ்மான், டத்தோ பூத்தே, சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், அரசியல் செயலாளர் ரவீந்திரன், சிறப்பு செயலாளர் சுகுமாரன் பெரியசாமி, தனிச் செயலாளர் மகேஸ்வரி ஆகியோரும் இந்த விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

