

கோலாலம்பூர் மே 29-
கோபியோ எனப்படும் மலேசிய இந்தியர் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை அனைத்துலக இந்தியர் கலாச்சார விழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்த பள்ளி வளாகத்திலும் ஆசிரமம் மண்டபத்திலும் இரு தினங்களுக்கு நடைபெறும் இந்த அனைத்துலக கலாச்சார விழாவில் 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
பல நாடுகளில் இருந்து பேராளர்கள், தொழில் முனைவர்கள், கலைஞர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
ஜூன் மாதம் 2 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் சிறப்பு வருகை புரிந்து இந்த அனைத்துலக கலாச்சார விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று கோபியோ தலைவர் எஸ். குணசேகரன் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர்களின் கலை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும் இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து ஆதரவு தரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

