
கோலாலம்பூர், ஜூன் 8-
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளான முடிதிருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
எதிர்நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு மிக விரைவில் நல்ல செய்தி வரும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்
அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் மனிதவள அமைச்சர் சிவகுமார் வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்.
அமைச்சரவை ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக வரும் 27 ஆம் தேதி மூன்று அமைச்சுகளுடன் மீண்டும் முக்கிய சந்திப்பு நடைபெறும்.
அதன் பின்னர் அமைச்சரவை ஒப்புதலோடு நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் சிவகுமார் நேற்று அறிவித்துள்ளார்.
இது பற்றி கருத்துரைத்த டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், கடந்த 14 ஆண்டுகளாக இந்த இனிப்பான செய்திக்கு காத்திருக்கிறோம் என்றார்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனையை ஒரு முக்கிய பிரச்சனையாக மனிதவள அமைச்சர் சிவகுமார் கவனத்தில் கொண்டு இதற்கு தீர்வு காண போராடி வருவதை நாங்கள் அறிவோம்.
கடந்த 2009 இல் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் 2019 இல் இது முற்றாக தடை செய்யப்பட்டது.
கடந்த 14 ஆண்டுகளாக
காத்திருக்கும் எங்களுக்கு இப்போதுதான் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.

