
பிஎஸ்எம்-இன் தற்போதைய தேசியத் தலைவராக இருக்கும் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ் அவர்களை முன்னோடியாக கொண்டியங்கும் அக்கட்சியின் பாரம்பரியத்தைப் பின்பற்றி, மேரு வேட்பாளர் சிவரஞ்சனி மாணிக்கமும் தனது சொத்து விபரங்களை பொதுமக்களிடம் அறிவித்தார். 1999-ஆம் ஆண்டில் மலேசியாவில் சொத்து விபரங்களைப் பொதுவில் அறிவித்த முதல் அரசியல்வாதியாக டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ் திகழ்கிறார்.
இம்முறை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் 42 வயதான சிவரஞ்சனியும் இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் தனது சட்டபூர்வ சொத்து விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது நிகர சொத்து மதிப்பு 290 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது.
அவர் 2019-இல் 150 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் தனது நண்பரிடம் பெற்ற கடன் மூலம் வாங்கிய மலிவு விலை அடுக்குமாடி வீடு ஒன்றினை வைத்திருக்கிறார்.
அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் முறையே 2017 மற்றும் 2022 இல் வாங்கிய ஆக்ஸியா மற்றும் புரோட்டான் எக்ஸ் 50 ஆகிய இரண்டு வாகனங்கள் உள்ளன. புரோட்டான் எக்ஸ் 50-இன் கடன் தவணையைக் குடும்ப உறுப்பினர் ஒருவர் செலுத்தி வரும் வேளையில் சிவரஞ்சனி அவரது ஆக்சியா வாகனத்திற்கான கடனை இன்னும் செலுத்தி வருகிறார்.
அவருக்கு 81 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய கடன் உள்ளது.
அரசியலில் சொத்து குவிக்கும் கலாச்சாரத்தைத் தவிர்க்க, தேர்தல் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களை அறிவிப்பது முக்கியம் என சிவரஞ்சனி கூறினார்.

