

புத்ரா ஜெயா செப் 29-
நாட்டில் குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் 140 தமிழ்ப் பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட்டால் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20,000 மாக உயரும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமாரிடம் இன்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ் ஆர்வலர்கள் அருண் துரைசாமி, குமரன் மாரிமுத்து, ராஜசேகரன் மாரிமுத்து, சிவன்ராஜ் மற்றும் டத்தோ மன்னன் ஆகியோர் இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.
நாட்டில் 87 தமிழ்ப் பள்ளிகளும் கல்வி சார்ந்த சிவில் சமூகக் குழுக்களுடன் இணைந்து மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் குறித்து ஆய்வுகளை நடத்தியதாக அருண் துரைசாமி இந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.
ஆய்வின் அடிப்படையில், நாட்டில் 147 புதிய தமிழ்ப் பள்ளிகள் தேவை என்று கண்டறிந்துள்ளோம்.
ஜோகூர் பாரு, பெட்டாலிங் ஜெயா, கிள்ளான் மற்றும் மத்திய பேராக் போன்ற சில பகுதிகளில் அதிக தமிழ்ப் பள்ளிகள் தேவைப்படுகின்றன,
“உதாரணமாக, ஜோகூர் பாருவில் சில தமிழ்ப் பள்ளிகள் உள்ளன, அங்கு கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் உள்ளனர்.
“கிட்டத்தட்ட 5% அல்லது 21 தமிழ்ப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு இடமளிக்க இரண்டு அமர்வுகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
“சில பகுதிகளில், குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, புச்சோங், ஜோகூர் பாரு போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ளது. இங்கு புதிய தமிழ்ப் பள்ளிகள் தேவை.
குறைந்த எண்ணிக்கையிலான தமிழ்ப் பள்ளிகளை புதிய இடங்களுக்கு மாற்றலாம்.
இது நடந்தால், தற்போது 85, 424 ஆக இருக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 120,000 ஆக உயரும் என்று அருண் குறிப்பிட்டார் .
அருண் துரைசாமி தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்குவேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

