

கோலாலம்பூர் அக் 17-
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ முருகன் செண்டரில் மாபெரும் அளவில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளும் இந்த கார்த்திகை தீப விழாவில் முதல் தீபத்தை ஏற்றி வைக்கும்படி மனிதவள அமைச்சர் வ. சிவகுமாருக்கு
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தந்தை என்று போற்றப்படும் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா இன்று நேரில் அழைப்பு விடுத்தார்.
மரியாதை நிமித்தமாக டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து உரையாடினார்.
வரும் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் கார்த்திகை தீப விழாவில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படவிருப்பதாக டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா தெரிவித்தார்.
நமது பாரம்பரியத்தின் பலத்தை அறுவடைச் செய்து, தற்கால இந்திய சமுதாயத்தின் சவால்களைத் தகர்த்து, எதிர்கால தலைவர்களாக நமது சமுதாயத்தை முன்னெடுக்க ஒரே நம்பிக்கையுடன் அக்னி சக்தியுடன் இந்தியர்களை ஒன்றிணைக்கும் வகையில்
ஶ்ரீ முருகன் நிலையம் இந்த கார்த்திகை தீப விழாவை எழுச்சியுடன் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மாணவர்கள் மத்தியில் கல்வி புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 1982 ஆம் ஆண்டு டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா தலைமையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 41 ஆண்டுகளில் 30,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை சாரும்.

