
தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ் ஊடகவியலாளருடன் மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் கலந்து கொண்ட தீபாவளி உபசரிப்பு இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
டமான்சாரா எச்ஆர்டி கோர்ப் மண்டபத்தில் இன்று மாலையில் நடைபெற்ற இந்த தீபாவளி உபசரிப்பை எச்ஆர்டி கோர்ப் நிறுவனம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.
மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் இணைந்து எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் உட்பட எச்ஆர்டி கோர்ப் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மனிதவள அமைச்சின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகவியாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 200 உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தக்க நேரத்தில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்த அமைச்சர் சிவகுமார் மற்றும் எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் ஹமீது ஆகியோருக்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் கு. தேவேந்திரன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற எச்ஆர்டி கோர்ப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கும் இந்த நிகழ்வில் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள இந்து பெருமக்கள் வரும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடவுள்ளனர்.

