


செலாயாங், டிச 3-
நாட்டில் குருக்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உள்நாட்டிலேயே ஆன்மீக முறையில் அர்ச்சர்களை உருவாக்கி வரும் மலேசிய குருக்கள் சங்கத்தின் பணி பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
முறையான பயிற்சிகளை வழங்கி அர்ச்சகர்களை உருவாக்கினால் நாட்டில் அர்ச்சர்கள் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று.
மலேசியா குருக்கள் சங்கத்தின் 25- ஆண்டு வெள்ளி விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சங்கத்தை தலைவராக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் சிவஸ்ரீ பிரகலாதன் குருக்கள் மற்றும் செயலவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குருக்கள் சங்கம் தனது சேவையை மேம்படுத்தும் வகையில் நாளைய தலைமுறையை உருவாக்கும் மாபெரும் சிந்தனையோடு சங்கத்திற்கு புதிய கட்டிடம் வாங்க நிதி திரட்டும் வகையிலும் மற்றும் சங்க உறுப்பினர்கள், ஆலய சிப்பந்திகள், ஆலய தலைவர்கள், ஆலய நன்கொடையாளர்கள் மற்றும் நற்பணிகளை செய்து கொண்டிருக்கும் அனைவரையும் கௌரவிக்க வண்ணமாக இந்த விழா அமைந்திருக்கிறது.
நம் மலேசியத் திருநாட்டில் ஆயிரக்கணக்கான திருக்கோவில்கள் சிற்ப சாஸ்திரத்துடன் அழகுற அமையப்பெற்று ஆகம பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மலேசியத் திருநாட்டில் உள்ளூர் குருமார்களாக சேவையாற்றி
பக்தர்களிடம் தெய்வ நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரும் பங்காற்றி வருபவர்கள் ஆலய குருக்கள்.
வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு நம் வழிப்பாட்டு முறைகளையும் நாளைய தலைமுறை இறையருளோடும் அவர்கள் வாழ்க்கை தொடர வேண்டும் என்றும் பெரும் நோக்கத்திலே சேவை ஆற்றிக் கொண்டிருக்கும் மலேசியா குருக்கள் சங்கத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமய மேம்பாட்டிற்கும் முன் உதாரணமாக மலேசிய குருக்கள் சங்கம் திகழ வேண்டும் என்றார்.
செலாயாங் ஐடியல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் லோட்டஸ் குழுமத்தின் உரிமையாளர் டான்ஸ்ரீ ரெனா. துரைசிங்கம், மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன், மலேசிய ஆதி சங்கரர் திருமடத்தின் தலைவர் சுவாமி மகேந்திர குருக்கள், ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், புத்ரி சில்லி சோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் பரமசிவம், சபா இந்தியர் சங்கத்தின் தலைவர் டத்தோ நாகராஜ், சென்னை சில்க் பேலஸ் உரிமையாளர் தனசேகரன், இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

