
இங்குள்ள ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தின் ஏற்பாட்டில் 15 வது ஆண்டாக அருணகிரிநாதர் விழா இம்மாதம் 31லும், ஜனவரி 1 லும் ஈப்போ லகாட் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மலேசிய முருக பக்தி பேரவையின் தலைவரும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான மகப்பேறு மருத்துவர் டாக்டர் வ.ஜெயபாலன் கூறினார்.
இந்நிகழ்வை முன்னிட்டு வரும் 26 ல் மாணவர்களுக்காக அமுதம் வகுப்புகள் நடைபெறும். இம்முறை 100 மாணவர்களுடன், 30 தன்னார்வலர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். இவ்வாண்டில் வரும் 26 முதல் 31 வரை இந்த அமுதம் வகுப்புகள் நடைபெறும் பொழுது ஆன்மீக சுற்றுலா பயணமாக பினாங்கு மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இம்வாண்டு அருணகிரிநாதர் விழாவின் சிறப்பு பிரமுகராக மலேசியா சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் பலன் கலந்துக்கொள்ளவுள்ளார்.இவர் ஜனவரி 1 ல் தொடங்கப்படவுள்ள காலை 9.00 மணி நிகழ்வில் கலந்துக்கொள்கிறார் என்று ஏற்பாட்டுக்குழு தலைவருமான டாக்டர் ஜெயபாலன் சொன்னார்.
அதனைத்தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் மலேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கலந்துக்கொள்ளவுள்ளார். அவரைத் தொடர்ந்து பொற்கிழிக் கவிஞர் பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டில் நாடு முழுவதும் அருணகிரிநாதர் விழா நடைபெற ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. அதன் அடிப்படையில், இம்மாதம் 25 ல் சுங்கைவே சிலாங்கூர் திருமுருகன் ஆலயத்தில் அருணகிரிநாதர் விழா நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 26 ல் சிரம்பான் பால தண்டாயதபாணி ஆலயத்திலும், 27 ல் கேமரன் மலை பெரின்சாங் முருகன் ஆலயத்திலும் இந்த அருணகிரிநாதர் விழா நடைபெறும்.
அதுமட்டுமின்றி, 28 ல் பினாங்கு தண்ணீர்மலை முருகன் ஆலயத்திலும், 29 ல் லுனாஸ் பாயா பெசாரிலும், 30 ல் பினாங்கு செப்ராங் பிறையிலும், 31 ல் ஈப்போ தண்டாயுதபாணி ஆலயத்திலும் நடைபெறப் போவதாக அவர் இத்தகவலை வெளியிட்டார்.

