
ஈப்போ, ஜன. 22:
ஈப்போ கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழா களைகட்டியது. 24.1.2024( புதன்கிழமை) காலை மணி 6.00 க்கு புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து கல்லுமலை முருகன் ஆலயத்தை நோக்கி இரத ஊர்வலம் தொடங்கி பின் காலை சுமார் 11.00 மணியளவில் கல்லுமலை முருகன் ஆலயத்தை வந்தடையும் என்று ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் கெளரவ செயலாளர் வெ.மு. தியாகராஜன் கூறினார்.
அதன் பின் மாலை 3 மணி தொடங்கி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்த தொடங்கலாம். பால் குடம், காவடிகள் ஏந்தி தங்கள் காணிக்கையை பகதர்கள் தைப்பூசதன்று( 25.1.2024) மாலை 4 மணி வரை செலுத்த அனுமதி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
காவடிகள் ஏந்தி வரும் பக்தர்கள் புதன்கிழமை( 24.1.2024) மாலை 6 மணிக்கு புந்தோங் மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து எடுக்க தொடங்கலாம். அதுபோலவே, கல்லுமலை ஆலயத்தின் அருகாமையில் இருக்கும் ஆற்றங்கரையிலிருந்தும் பக்தர்கள் காவடி காணிக்கைகளை செலுத்தலாம் என்றும் அவர் சொன்னார்.
பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களான பால்குடம், காவடி எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தைப்பூசதன்று நள்ளிரவு 12 மணியளவில் முற்றுப்பெரும். ஆகவே, பக்தர்கள் இந்த நிலைப்பாட்டை புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டு சாலைகளில் காவடிகள் செல்லுவதற்கு மட்டுமே முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சாலைகளில் பாதுகாப்பாக காவடிகள் எந்திவர சாலைகளும் மூடப்படும். ஆகவே பக்தர்கள் காவடிகளும் பால்குடங்களும் ஏந்தி குறிப்பிட்ட நேரத்தில் கல்லுமலை முருகன் ஆலயத்தை வந்தடைய முடியும் என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மறுநாள் 26.1.2024( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி கல்லுமலையில் முருகன் ஆலயத்தில் பூசைகள் நடத்தியபின் மாலை 6 மணியளவில் இரத ஊர்வலம் தொடங்கும். இந்த இரத ஊர்வலம் மறுநாள் காலையில் புந்தோங் மாரியம்மன் கோவிலை வந்தடையும் என்று தெரிவித்ததோடு இந்த இரத ஊர்வலத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.
இந்த தைப்பூசத் திருவிழா முழுதும் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க போலீஸ்படையினரும் இதர சீருடை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேவேளையில் பொதுமக்களும் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். பாதுகாப்பு கருதி பெண்கள் அதிக நகைகளை அணித்துக்கொண்டு வர வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

