
கோலாலம்பூர் பிப் 29 –
உலக அளவில் போட்டியிட அனைத்து இனங்களிலும் உள்ள திறமை மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் பூமிபுத்தரா பொருளாதார மாநாட்டின் முதல் நாளில் மடானி கலந்துரையாடல் அமர்வில் துணை அமைச்சர் டத்தோ ஆர் இராமணன் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
மனித மூலதனம் எந்த நாட்டிலும் மிகப்பெரிய சொத்தாக இருப்பதால், உலக அளவில் போட்டியிட அனைத்து இனங்களிலும் திறமைகளை வளர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று துணை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சருமான அவர் சொன்னார்.
அத்தகைய திறமைகளுக்காக போட்டிபோடுவதில் மலேசியா மற்ற நாடுகளை விட பின் தங்கிவிடக்கூடாது.நாம் பாரபட்சமின்றி நாட்டில் சிறந்த திறமைகளை வளர்த்து, அவர்களை முன்னணியில் வைக்க வேண்டும். அதனால் நாம் உலகளவில் போட்டியிட முடியும்.
பிற இனங்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கியிருப்பதால் அரசாங்கத்தின் கவனமும் உதவியும் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பாரபட்சமின்றி சிறந்த திறமைசாலிகளை வளர்த்து, அவர்களை முன்னணியில் நிறுத்த வேண்டும்.
1960களில் தோட்ட துண்டாடல்களைத் தொடர்ந்து இந்திய சமுதாயம் கைவிடப்பட்டது. தற்போது இந்தியர்களிடையே நிலவும் நகர்ப்புற வறுமையின் பிரச்சினையை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
அவர்களுக்கு உரிய வேலை இல்லை. தங்குவதற்கு தகுதியான இடம் இல்லை. இதனால் அவர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தாலும், அங்கு வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லாததால் நகர்ப்புற ஏழைகளாக உருமாறி விட்டனர் என்று குறிப்பிட்டார்.

