
கோலாலம்பூர், மார்ச் 5-
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இந்தியப் பயணத்தை இந்திய அரசாங்கம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி தெரிவித்தார்.
தொழில்முனைவு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஆர்.இரமணன் ராமகிருஷ்ணனை இன்று மெனாரா வங்கி ரக்யாட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் மலேசியா வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டிருப்பதாக இந்திய அரசாங்கம் உணர்கிறது.
இந்திய அரசாங்கம் மலேசியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMEs) மற்றும் கூட்டுறவுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய பொருளாதாரத் துறையில்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்பு என்பது விவாதத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நிரலாகும் என்று டத்தோ இரமணன் தெரிவித்தார்.
இந்தத் துறையில் SME களின் சாத்தியமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்தத் துறையில் வலுவான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பினரும் தங்கள் அர்ப்பணிப்பையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்,” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மணிநேர சந்திப்பின்போது, இரு நாடுகளின் SME களை உள்ளடக்கிய மூலோபாய ஒத்துழைப்பை நிறுவுவதுடன், மலேசிய சந்தையில் இடம்பெறும் வகையில் நாட்டின் SME துறையை மலேசியாவிற்கு இந்திய அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் டத்தோ இரமணன் பரிந்துரைத்தார்

