
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த
பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை உடைக்க மற்றோர் திட்டம் அரங்கேற்றம் காண்கிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த இடத்தை பாரம்பரிய சின்னமாக பதிவு செய்யும் அரசாங்கத்தின் திட்டம் என்னவானது என்று மீரா கட்சி தலைவர் டத்தோ சந்திரகுமணன் கேள்வி எழுப்பினார். பிரிக்ப்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் கடந்த 1904ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த ஆசிரமம் மலேசிய இந்தியர்களின் அடையாளமாகவும் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. மேம்பாட்டு திட்டத்தால் இந்த ஆசிரமத்தை உடைக்கும் முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மலேசிய இந்தியர்கள் ஒற்றுமையாக இந்த இடத்தை பாதுகாக்க போராடினர். அப்போதைய சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி இந்த இடம் பாரம்பரிய சின்னமாக பதிவு செய்யப்படும் என அறிவித்தார்.
இதனால் இந்த ஆசிரமம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால் தற்போது 2040ஆம் ஆண்டுக்கான டிபிகேஎல் மேம்பாட்டுத் திட்ட வரைப்படத்தில் இந்த ஆசிரமம் இடம் பெறவில்லை.
அப்படி என்றால் இந்த ஆசிரமம் உடைக்கப்பட போகிறதா என்ற சந்தேகம் எங்களின் மனதில் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் தான் இன்று காலை இந்த ஆசிரமத்தின் முன் கூடி அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் பாதுகாக்கப்பட வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் உடைக்கப்படக்கூடாது. இதுதான் எங்களின் கோரிக்கை. ஆகவே கோலாலம்பூர் மாநகர் மன்றம், கூட்டரசுப் பிரதேச அமைச்சு இந்த விவகாரத்தில் உரிய தீர்வை வழங்க வேண்டும்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலையிட வேண்டும் என்று மீரா கட்சியின் தலைவர் டத்தோ சந்திரகுமணன் கேட்டுக் கொண்டார்.

