

செ.வே. முத்தமிழ் மன்னன்
புத்ராஜெயா, ஏப்ரல் 5-
அந்நிய தொழிலாளர் விடிஆர் விசாவுக்கான கால நீட்டிப்பை வரவேற்கிறோம்.
ஆனால் 21 நாள் கால அவகாசம் போதாது என்று பிரிமாஸ் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி கூறினார்.
அந்நிய தொழிலாளர்களுக்கான விடிஆர் விசாவுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கான முதலாளிகளின் கோட்டா ரத்து செய்யப்படும் என உள்துறை அமைச்சு அறிவித்தது.குறிப்பாக மார்ச் 31ஆம் தேதியோடு இதற்கான விண்ணப்பம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து தொழில் துறையினரும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் விடிஆர் விசாவுக்கான காலத் தவணையை ஏப்ரல் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.அதே வேளையில் இந்த கால அவகாசம் எங்களுக்கு போதாது. கூடுதல் அவகாசம் தேவை என்று அவர் சொன்னார்.
தெக்குனின் ஸ்புமி திட்டத்திற்கான 30 மில்லியன் ரிங்கிட் தற்போது 60 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்நிதியை உயர்த்திய தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ இரமணனுக்கு எனது நன்றி.
அதே வேளையில் இதற்கான விண்ணப்பங்கள் முறைகள் அனைத்தும் எளிமையாக்கப்பட வேண்டும். இதனை டத்தோ இரமணன் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பிரிமாஸின் நோன்பு திறப்பு நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது சுரேஸ் இதனைத் தெரிவித்தார்.

