
கோலாலம்பூர்:
ஷவ்வால் பிறை பார்த்து ஈகை பெருநாளாம் நோன்பு திருநாளை மகிழ்ச்சியோடும் மனா நிறைவோடும் கொண்டாட வாய்ப்பளித்த வல்ல அல்லாஹ்விற்கு முதலில் என் நன்றியத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் தமது பெருநாள் வாழ்த்து செய்தியில் கூறினார்.
நாட்டில் மக்களிடையே ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் மேலோங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஒரு மாதம் நோன்பிருந்தோம். நாம் உண்ணாமல் பருகாமல் விழித்திருந்து இறைவழிபாட்டில் அதிக அளவில் ஈடுபாட்டோம்.
இந்த வெற்றித் திருநாளில் நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வேண்டுகிறேன். நமக்கு ஆகுமானவற்றைக்கூட இறைவனின் கட்டளைப்படி, இறைவனுக்காக நமக்கு நாமே தடை விதித்து, நோன்பிருந்தோம். அழகான கட்டுப்பாட்டோடு ரமலான் மாதம் முழுவதும் நல்லவற்றை செய்தோம். தவறு செய்வதிலிருந்து விலகி இருந்தோம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லிச் சென்ற வழியில் நமது மனதுக்கு எதிராக ஓர் அறப்போராட்டமே நடத்தி வெற்றிபெற்றுள்ளோம். இது ஒரு வெற்றித் திருநாளாகும்.
இப்போது நமக்கு தேவையானது ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும்தான். சில்லறை பிரச்சினைகளில் தலையிட்டு நமது நேரத்தை வீணாக்கக்கூடாது. நாம் செல்ல வேண்டிய இலக்கு வெகு தொலைவில் உள்ளது. சமூகத்திற்கு எதிராக நாம் செயல் படக்கூடாது. தீமைகளைக் கண்டால் ஒற்றுமையோடும் தூரநோக்கு சிந்தனையோடும் அவற்றை எதிர்த்து போராட வேண்டும்.
பன்முக சமூகத்தில் வாழும் நாம் அதிக சகிப்புத்தன்மையுடன் உயர்ந்த இலட்சியத்துடன் வாழ வேண்டும்.
இஸ்ரேல் புரிந்துவரும் அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை தடுக்க அனைவரும் இறைஞ்ச வேண்டும். பாலஸ்தீனத்தில் அமைதி திரும்ப வேண்டும். யுத்தங்கள் இல்லாத உலகம் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கிடைக்க வேண்டும்.
வல்ல அல்லாஹ் நம் நாட்டையும் மக்களையும் வளப்படுத்த வேண்டும். எங்கும் அமைதி நிலவ வேண்டும். நம் அனைவருக்கும் நல் ஆரோக்கியமும் மன நிம்மதியும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் வேண்டும் என்று இந்த நல்ல நாளில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் ரமலான் வாழ்த்து செய்தியில் கூறினார்.

