
கோலாலம்பூர், ஏப்.14-
இந்தியச் சமுதாயத்தில் உருமாற்றம் நிகழ வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கின்ற நாம், அதனை மெய்ப்படுத்தும் வண்ணம் உருமாற்றத்தின் உந்துச் சக்தியாக வலிமை கொண்டு செயல்பட வேண்டும் என தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தனி மனிதனின் மாற்றம், ஒரு தலைமுறையின் மாற்றம் என்பதை தலைமுறை தாண்டி கண்டுணர்ந்துள்ள நாம், மற்ற சமூகத்தினருக்கு ஈடாக நம் சமூகத்தினரும் பொருளாதார பலம் பொருந்தியவர்களாக உயர்வதற்கு, தற்கால இளைஞர்கள் உருமாற்றத்தின் பலம் பொருந்திய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கருத்துரைத்தார்.
மற்ற சமூகத்தினர் எப்படி உயர்ந்தார்கள் என்பதை ஆராய்ந்து, அவர்களின் முன்னேற்றப் பாதையை பின் தொடர்ந்து, நாமும் அனைத்து துறைகளிலும் பீடு நடை போடுவதற்கான நன்முயற்சியில் இறங்க வேண்டும்.
அம்முயற்சிக்குக் கூடுதல் ஆதரவு சேர்க்கும் வண்ணம் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் உள்ள குறிப்பிட்ட சில ஏஜென்சிகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
அவ்வகையில், இந்திய தொழில்முனைவோருக்காக ஒதுக்கப்பட்டிருந்த 30 மில்லியன் ரிங்கிட் தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவியை 60 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கியது, இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் வழி இன்னொரு 50 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்ததானது நம் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த முன்னெடுப்புகள் என்று அவர் குறிப்பிட்டார்.

