
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை திங்கி, மே 6-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மேரி தோட்டம், நைகல் கார்ட்டன், புக்கிட் தாகார், சுங்கை திங்கி, மிஞ்சாங் தோட்டம் ஆகிய ஐந்து தோட்டங்களை சேர்ந்த 245 பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் வழங்கப்படுவது புதிய வரலாறு என்று. சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
கடந்த 26 ஆண்டுகளாக சொந்த வீடுகளுக்கு ஐந்து தோட்ட பாட்டாளிகள் போராடி வந்தனர்.
இப்போது அவர்களுக்கு புதிய விடிவுகாலம் பிறந்துள்ளது என்று அவர் சொன்னார்.
பெர்ஜெயா மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பில் 245 தோட்டப் பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் இன்று அறிவித்தார்.
இரண்டு ஆண்டுகளில் இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
8 கோடி வெள்ளி செலவில் கட்டப்படும் இந்த வீடமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு 4 கோடி வெள்ளியும் சிலாங்கூர் மாநில அரசு 3 கோடியே 50 லட்சம் வெள்ளியும் ஒதுக்கியுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் மீது அக்கறை செலுத்தி இந்த வீடமைப்பு திட்டத்திற்கு மிகப்பெரிய மானியத்தை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐந்து தோட்ட பாட்டாளிகளின் வீடமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆகவே இனியும் இந்த வீடமைப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

