


செ.வே. முத்தமிழ் மன்னன்
பூச்சோங், மே 8-
ஆகம முறைப்படி பூமி பூஜையுடன் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளி புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மூன்று கோடி வெள்ளியில் கட்டப்படும் இந்த காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளி 18 மாதங்களில் பூர்த்தி அடையும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
நாட்டில் மிகவும் புகழ்பெற்ற தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
தேசிய வகை காசல்பீல்டு தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்படும் இந்த பள்ளியின் இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, துணை கல்வி அமைச்சர் ஓங் கா வா, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங்கின் அரசியல் செயலாளர் மாண்புமிகு சுரேஷ் சிங் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
6.1 ஏக்கர் நிலப்பரப்பில் 3 கோடி வெள்ளியில் கட்டப்படும் பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளி வருங்காலத்தில் மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கும் தமிழ்ப் பள்ளியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை என்று அவர் சொன்னார்.
பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியில் இப்போது 750 மாணவர்கள் பயல்கிறார்கள் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கற்பகம் தலைமையில் இந்த பள்ளியில் 45 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
தற்போது பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வழங்கப்பட்ட 6.1 ஏக்கர் நிலப்பரப்பில் 4 மாடி கட்டிடத்தில் 156 வகுப்பறைகளுடன் பள்ளி பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.

