
டோஹா, மே 15 – நாட்டில் இரண்டாவது சூதாட்ட விடுதிக்கு அனுமதி இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மலேசியா இலக்கவியல் உருமாற்றம், எரிசக்தி மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று கட்டார் பொருளாதார ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவையான துறைகள் இவையாகும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
எனது தனது நிர்வாகத்தின் கீழ் நாட்டில் இரண்டாவது கேசினோ தேவையில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“உறுதியாக இல்லை. மலேசியா (இரண்டாவது) சூதாட்ட வணிகத்தில் ஈடுபட வேண்டியதில்லை. இலக்கவியல் உருமாற்றம், எரிசக்தி மாற்றம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்”. மேலும், இது நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்குப் போதுமானது என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
இதுவரை மலேசியா ஒரே ஒரு கேசினோ உரிமத்தை மட்டுமே வழங்கியுள்ளது. இது கடந்த 1969ஆம் ஆண்டு கெந்திங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
bernama.