
சுங்கை சிப்புட்,மே17-
துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஓர் அற்புதம் மனிதர்.
மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் ஒப்பற்ற தலைவர்.
மலேசிய அரசியலில் தனக்கான தனித்துவ இடத்தை பெற்றவர்.நாட்டின் முதல் இந்திய அமைச்சராகவும் ,ஐந்து துறைகளில் அமைச்சராகவும் சிறந்த சேவையையும் மக்கள் பணியையும் ஆற்றிய உன்னத மனிதர்.(தொழிலாளர் அமைச்சர், சுகாதாரம்.. எரிபொருள்.. தபால்..தந்தி துறை.. பொதுப் பணி..
தேசிய ஒற்றுமை துறை)
இன்றையத் தலைமுறைக்கு துன் சம்பந்தன் என்னும் பெயர் அந்நியமாக கூட இருக்கலாம்.ஆனால்,தலைமுறைகள் தாண்டியும் வாழும் நம் இனத்தின் அடையாளம் இவர்.
இந்தியச் சமுதாயத்தை தலைநிமிர வைத்த ஏணிப்படி இவர்.இவரது தூரநோக்கு சிந்தனையும் திட்டங்களும் இந்தியச் சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றியது எனலாம்.
தோட்டங்களில் கை கட்டி வேலை செய்தவர்களை தோட்டங்களுக்கு உரிமையாளனாக்கிய இந்தியச் சமுதாயத்தின் நிகரற்றத் தலைவன்.
தோட்டத் துண்டாடலால் தவித்து நின்ற சமூக்த்தை நம்பிக்கையோடு கரம் பற்றி பத்து பத்து வெள்ளியாக வசூல் செய்து தோட்டங்களை வாங்கினார்.குனிந்து நின்ற நம் சமுகத்தை நிமிர செய்த நெம்புகோளாய் உயர்ந்து நின்ற மனிதருள் மாணிக்கம் அவர்.
தோட்டத்தில் வாழ்ந்த நம் மக்களுக்கு சுகாதாரம்,கல்வி,நல்ல வீட்டு வசதி என பல்வேறு நிலைகளில் நம் இனத்தின் வாழ்வாதாரம் சிறக்க் சிந்தித்து அதனை நடத்தியும் காட்டிய மாபெரும் தலைவராக அன்று உலா வந்த துன் சம்பந்தன் இன்றைக்கும் மக்களின் மனங்களில் நினைவாக வாழ்கிறார்.
அதுமட்டுமின்றி,அன்றைக்கு அவர் தொடங்கிய தேசிய நில நிதி கூட்டுறவு கழகம் தான் இன்றைக்கும் நம் இனத்தின் மாபெரும் பொருளாதார திட்டமாய் உயர்ந்து நிற்கிறது.டான்ஸ்ரீ சோமசுந்தரம் தலைமையிலும் அதன் தலைமை நிர்வாகி டத்தோ சகாதேவன் அவர்களின் நிர்வாகத்தினாலும் மலேசிய நாட்டில் தலைசிறந்த கூட்டுறவுக் கழகமாகவும் நம் இனத்தின் பொருளாதார பொக்கிசமாகவும் அது திகழ்கிறது என்பது பெருமிதமானது.
பங்குதாரர்களின் பொருளாதாரத்தை உயர்த்திடும் அதேவேளையில்,மருத்துவம்,அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி. உட்பட நாட்டின் இலக்கியவாதிகளோடு கலை,பண்பாடு என முத்தமிழ் வளர்ச்சியிலும் கூட்டுறவுக் கழகம் பெரும் பங்காற்றி வருவதை மறுப்பதற்கில்லை.ஒரு சமூகத்தின் அடையாளமாகவே அதனை செழிமையுற முன்னோக்கி நகர்த்தி வரும் டான்ஸ்ரீ சோமசுந்தரம் மற்றும் டத்தோ சகாதேவன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
துன் சம்பந்தனின் 45ஆம் ஆண்டு நினைவுநாளை நினவுக்கூறும் அதேவேளையில் 65ஆம் ஆண்டில் வெற்றிகரமாய் தேசிய நிலநிதிக் கூட்டுறவுக் கழகம் அதன் பயணத்தை பதிவு செய்திருப்பதும் இங்கு போற்றுதல்குரியது.
துன் வீ.தி.சம்பந்தன் ம இ கா தலைவர் மட்டும் அல்ல.அவர் நாட்டின் முதன்மை அமைச்சராக நம் இனத்திற்கு பெருமை சேர்த்தவர்.இந்நாட்டில் துங்கு அப்துல் ரஹ்மானின் நம்பிக்கை பெற்று அவரின் பிரதிநிதியாக பிரதமராய் கூட உயர்ந்து நின்றவர்.அவர் இந்நாட்டின் தலைவர்,நம் இனத்தின் முகவரி.
அவர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னமும் மக்களின் மனங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.மண்ணில் மறைந்திருந்தாலும் மக்களின் மனங்களில் வாழும் சகாவரம் பெற்ற மாபெரும் தலைவன்.தலைமுறைகள் கடந்து போகலாம்.இந்த தலைவனின் நினைவும் அவர் செய்திட்ட சேவையும் மாண்பும் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.அது காலத்தை வென்று நிற்கும்.
ஆக்கம்
கி.மணிமாறன்
சுங்கை சிப்புட்
(துன் வீ.தி.சம்பந்தனின் 45வது ஆண்டு நினைவுநாள் கட்டுரை)

